வன்னிப்பகுதியில் இடம்பெற்றுவரும் கடும் ஷெல் வீச்சு மற்றும் விமானத்தாக்குதல்கள் காரணமாக அங்குள்ள மக்கள் எங்கே செல்வது, எங்கே தங்குவதெனத் தெரியாமல் அவதிப்படுவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரட்ணம் பி.பி.ஸி.க்கு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்;
வட்டக்கச்சி, கல்மடு, இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் இடம்பெயர்ந்து வருகின்ற வழிகளில் ஷெல் தாக்குதல்களும் விமானத்தாக்குதல்களும் இடம்பெறுகின்றன.
இத்தாக்குதல்களால் ஒரு இடத்தில் 2 பேரும் மற்றொரு இடத்தில் நான்கு பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
தர்மபுரத்துக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையில் உள்ள இடங்களுக்குத்தான் இவர்கள் இடம்பெயர்கின்றனர்.
இந்த மக்கள் படுகின்ற வேதனைகளைப் பார்க்கமுடியாமல் உள்ளது. இவர்களுக்கு இங்குள்ள சில தொண்டர் நிறுவனங்கள் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றன. இந்த இடம்பெயரும் மக்களை தற்போது பெய்யும் கடும் மழை பெரிதும் துன்பப்படுத்துகிறது.
மழையினால் வாகனங்கள் வீதிகளில் செல்லமுடியாது காணப்படுகின்றன. சில வாகனங்கள் வீதியை விட்டு புரண்டுள்ளன.
இந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதமூலம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தானும் இடம்பெயர்ந்து ஒரு அகதியாக சிறிய குடிசையில் தங்கியுள்ளதாகவும் கணகரட்னம் எம்.பி.மேலும் தெரிவித்தார்.
தினக்குரல் - 12.01.2009