கிளிநொச்சியில் இடம்பெறும் மோதல் நிலைமை காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் கொட்டும் மழையிலும் கிளிநொச்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு நோக்கி இடம்பெயர்வதாக அம்மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஷெல் வீச்சு காரணமாக வட்டக்கச்சி, ஊரியான் , முரசுமோட்டை , கோரகண்கட்டு மற்றும் கண்டாவளை பிரதேசங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் கிளிநொச்சி மேற்குப் பகுதிக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கடும் மழை பெய்த நிலையில் மழையில் நனைந்தபடி பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாகவிருந்தது.
இவ்வருடத்துக்கான முதல்வார நிவாரணப் பொருட்களை நாம் தற்போது விநியோகித்து வருகின்றோம். செஞ்சிலுவைச் சங்கம் வழித்துணை சேவையை வழங்காமையினால் வன்னிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 20 உணவு லொறிகளில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு வரமுடியாத நிலைமையேற்றபட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு உலக உணவுத் திட்டத்தின் பொருட்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து இல்லாமையினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் கிடைக்கவில்லை. எனினும் தமது பரீட்சை முடிவுகளை மாணவர்கள் இணையத்தளம் ஊடாக பார்வையிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தினக்குரல் - 08.01.2009