 2 இலட்சத்து 16 ஆயிரத்து 195 பேர் முல்லை மாவட்டத்தில் இடம்பெயர்வு. December 30, 2008
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இரண்டு இலட்சத்து பதினாறாயிரத்து 195 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில மூன்று உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் இடம்பெயர்ந்துள்ளன. துணுக்காய், மாந்தைமேற்கு ஒட்டுசுட்டான் ஆகிய உதவி அரசாங்க அதிபர் பணிமனைகள் இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பு செயலகத்துடன் இணைந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன.
இடம்பெயர்ந்த 55118 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், விசுவமடு, உடையார்கட்டு போன்ற இடங்களில் நெருக்கமாகத் தங்கியுள்ளார்கள். மழைவெள்ளத்தினால் வீதிகள் சேதமடைந்துள்ளன.
இதனால் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பெரும் இடர்களை எதிர்நோக்கியுள்ளார்கள் இந்நிலையிலும் மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருவதால் இம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் தொகை மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது. இடம்பெயர்ந்துவரும் மக்களுக்கான அடிப்படைத்தேவைகள் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தீவிர முயற்சி எடுகின்றோம் என்றார்.
ஈழநாதம் - 30.12.2008 |